புதுதில்லி, ஜூலை 29-
உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தில், அடையாளம் தெரியாத நபர்களால் ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
64 வயதுடைய ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் அடையாளம் தெரியாத நபர்களால் கம்பால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் ஞாயிறு அன்று கூறினார்கள்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமையன்று இரவு கம்ராலி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட, கோடியான்-கா-பூர்வா கிராமத்தில் நடந்துள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அமனுல்லா கான் அவர்களை அடித்துக் கொல்லும்போது அவரும், அவர் மனைவியும் மட்டும் வீட்டில் இருந்தனர் என்று சம்பவம் தொடர்பாக அவர்களுடைய மகன் காவல்துறையினரிடம் கூறியதாக, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தயாராம் கூறினார்.
குண்டர்கள் தங்களிடமிருந்த கம்பால் அமனுல்லாகானை அவருடைய தலையில் அடித்ததால் சம்பவ இடத்திலேயே அமனுல்லாகான் இறந்து விட்டார். அமனுல்லாகான் சடலம் பிணப் பரிசோதனைக்காக அனுப்பப்படிருக்கிறது என்றும் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தயாராம் கூறினார்.
சீத்தாராம் யெச்சூரி
இந்தச் சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பாஜக ஆளும் மாநிலங்களில் எவ்வித பயமுமின்றி, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, சிறுபான்மையினரைக் கொல்வது என்பது தொடர்கிறது. இப்போது பலியாகியிருப்பவர் ஓர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்பதைப் பார்க்கும்போது எந்த அளவிற்கு வெறுப்பு அரசியல் சித்தாந்தம் ஆழமாக வேரூன்றி யிருக்கிறது என்பதைக் காணமுடிகிறது. இத்தகைய குண்டர் கும்பலைத் தண்டிக்க வேண்டியவர்கள் அவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
(ந.நி.)